பெர்முடா குறியீடு (சிறுகதை)

பெங்களூர் நோக்கி ட்ரையின் சென்று கொண்டிருந்தது.

ரிசர்வுடு (Reserved) கம்பார்ட்மென்டில், அப்பரில் (Upper) படுத்தபடி பயணித்து கொண்டிருந்தான் நந்தபாலா.

நந்தபாலாவுக்கு நார்பெத்தேட்டு வயது. சற்று நரைத்த முடி. இந்த வயதிலும் தொப்பை போடாத வயிறு. பார்ப்பதற்கு இளமையாக தெரியும் தோற்றம். கொஞ்சம் குழப்பவாதி. சில விசயங்களை விடாமல் குழப்பி கொள்வான்.

கண் ஆப்பிரேசனுக்குரிய  உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனத்தில் பாலிமர் டிப்பார்மெண்டில் உயர் பொறுப்பில் இருக்கும் ஒரு ஊழியன்.

வேலை பார்ப்பது சென்னை தான் என்றாலும். அடிகடி பெங்களூரில் உள்ள ஹெட் ஆபிஸ்க்கு (Head Office) சென்று வர வேண்டிய வேலை இருக்கும். இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு மருத்துவமனைகளின் தலைமை அதிகாரிகளுக்கு தங்களுடைய ப்ராடக்ட் (Product) பற்றிய விரிவுரைகளை தர வேண்டி இந்த பயணம் அடிகடி நடைபெறும்.

இரவு இரண்டு மணி இருக்கும். வேலூரை தாண்டி ட்ரையின் சென்று கொண்டிருந்தது.

நந்தபாலா ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டி அரை தூக்கத்தில் தடுமாறி கொண்டே எழுந்து சென்றான்.

பாத்ரூம் கதவை திறந்து உள்ளே சென்றான். இவனும் ஆட, ட்ரையினும் ஆட வந்த வேலை முடிந்து கொண்டிருந்தது. பாத்ரூமில் அங்கே இங்கே என நிறைய கிறுக்கபட்டிருந்தன. ஷாலினி லவ் கார்த்திக், இத படிக்கிறவன் தே...., ரூட்டு நம்பர், பேரு திவ்யா என்று ஒரு மொபைல் நம்பர் என நிறைய எழுதி இருந்தது. சில ஆபாசமான படங்களும் வரைய பட்டிருந்தது. அங்கே ஒரு சிம்பல் (முத்திரை (அ) குறியீடு) வரைய பட்டிருந்தது. பார்த்த உடனே சிறுது நேரம் ஈர்க்கும் வண்ணம் இருந்தது. மனதிலும் பதிந்து விடும். பார்க்காமல் வரைய சொன்னாலும் உடனே வரைந்து விட முடியும் பார்ப்பதற்கு ஹிந்தி எழுத்தை போல இருந்தது. கோடுகளில் அடக்கி பார்த்தால் முக்கோண (Bermuda) வடிவில் இருக்கும் அந்த குறியீடு. அந்த சிம்பல் கவனம் ஈர்த்த உடனே இவனுக்கு தூக்கம் தெளிந்தது.



பிறகு சென்று படுத்தான். தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்து தூக்கம் வரவே ஒரு மணி நேரம் பிடித்தது.

பெங்களூரில் மீட்டிங் நாளை என்றால் அதற்கு முந்தய நாளே வந்து தங்கி விடுவது வழக்கம். தன்னுடைய லாப்டாப்பில் ப்ராஜெக்ட்-ஐ பற்றிய தகவலை ப்ரிபாரிசன் (Preparation) செய்து கொள்வான்.

வழக்கமாக தான் தாங்கும் அந்த த்ரீ ஸ்டார்  ஹோட்டல் பெங்களூர் ரைஸ்கே (Hotel Bangalore Raise) இந்த முறையும் சென்றான். அவன் வந்து விட்டாலே ஹோட்டல் மேனேஜர் அவருடைய வழக்கமான பால்கனிக்கு அருகில் இருக்கும் ரூமை தந்து விடுவார். நந்தா புகை பிடிப்பதற்கும் இரவு தண்ணி அடிப்பதற்கும் சவுகரியமாக இருக்கும். ஆனால் இந்த முறை வேறு ஒருவருக்கு தரபட்டிருந்தது.

கோச்சிக்காதீங்க ஓனரோட பிரண்டு அதான் அந்த ரூம் அவருக்கு தந்துட்டேன் என கன்னட பாசையில் சமாளித்த மேனஜரை முறைத்து கொண்டிருந்தான் நந்தா.

சில மாதங்களாக இந்த ஹோட்டலிலேயே தங்குவது சவுகரியமாக இருந்தது. அருகில் தான் அவனது ஹெட் ஆபிஸ் என்பதால் நடந்தே சென்று விட முடியும். அதற்காக வேறு ஒரு ரூமில் தங்குவதற்கு சம்மதித்தான்.

ஓகே சார். அடுத்த முறை உங்களுக்கு தான் அந்த ரூம் என்றான் மேனஜர்.இப்போ மூணாவது மாடில உங்களுக்கு ரூம் இருக்கு. லிப்ட் இருக்கு... உங்களுக்கு வசதியா இருக்கும்.

ரூம்குள் சென்று ட்ரஸ்ஸை கழட்டி போட்டு விட்டு துண்டை கட்டி கொண்டான். கூலாக தம் அடிக்க தொடங்கினான். அங்குமிங்கும் தம் அடித்து கொண்டே நடந்தான். நீளமான கண்ணாடி ஒன்று இருந்தது. அங்கே சென்று தம் அடித்து கொண்டே தன் முடியை கோதி கொண்டிருந்தான்.

கண்ணாடியின் ஓரத்தில் அந்த சிம்பல். அதே சிம்பல். ட்ரைனில் பார்த்த அதே சிம்பல்.

அட என்பது போல அதை பார்த்தான். இதென்ன குறியீடு!? இதோட விளக்கம் என்ன?! ஒன்றும் புரியவில்லை.

மெதுவாக யோசித்தபடி குளிக்க கிளம்பினான். பாத்ரூம் கதவிலும் அதே சிம்பல். இவன் மூளை முழுவதும் அந்த குறியீடு ஆக்கிரமித்து கொண்டது. இதை பற்றியே யோசனை.

ரூம் பாய் வந்து சார் காப்பி வேணுமா என்றான். வழக்கம்போல சூடாக இருந்த காப்பி ஆரி போனபின் அவன் கைக்கு வந்தது. குடித்துவிட்டு அருகில் இருக்கும் பூங்காக்கு போனான்.

பெங்களூரில் அவன் சில இடங்களை தேர்ந்தெடுத்து வைத்துள்ளான். அதில் ஒவ்வொரு இடத்தை ஒவ்வொரு தடவை வரும் போது மாற்றி மாற்றி செல்வான்.

இந்த முறை பூங்காக்கு சென்றான்.

ஒரு மூலையில் அமர்ந்து ப்ராஜெக்ட் ப்ராப்ரேசன் செய்து கொண்டிருந்தான். சற்று சலிப்பாகவே மலர் கண்ணாடி கூண்டுக்குள் சென்று அழகழகான மலர்களை போட்டோ எடுத்தான்.

போட்டோக்கள் மிகவும் அழகாக இருந்தது. அந்த கூண்டை சுற்றி வெளியே செல்லும் வழி வரும் பொழுது இடது பக்கம் ஒரு மர பலகையினால் ஆன கதவு ஒன்று பூட்டிய நிலையில் இருந்தது. அந்த கதவுடன் இந்த மலர்கள் இரு புறமும் இருக்க அழகாக இருந்தது. அதனையும் ஒரு கிளிக் செய்து கொண்டான்.

அவன் இருக்கையில் வந்தமர்ந்து அந்த போடோக்களை பார்வையிட்டான். ஜூம் செய்து பார்த்தான். அப்பொழுது தான் கடைசியாக எடுத்த போட்டோவை ஜூம் செய்து பார்த்தபொழுது தெரிந்தது. அதே சிம்பல். ட்ரையின், ரூமின் கண்ணாடி இப்பொழுதும் அதே சிம்பல்.

அதிர்ச்சியில் இருந்தான். சில அம்மானுஷிய கதைகள் நினைவுக்கு வந்தது. இரவில் படுக்கையில் தூக்கம் வரவில்லை.

லாப்டாப் எடுத்தான். அந்த போட்டோவை லாப்டாப்பில் ஏற்றி அந்த சிம்பலை கிராப் செய்து அந்த இமேஜை கூகிள் இமேஜ் சர்ச்சில் அப்லோட் செய்தான். அதற்க்கு ஒத்துப்போன படிமங்கள்(image) வந்தது. அதில் சில அந்த சிம்பலாக இருந்தது. ஒவ்வொரு லிங்கயும் கிளிக் செய்து படித்து பார்த்தான்.

1987லில் பெங்களூரை அச்சுறுத்தியது மிக பெரிய கிரைம் அந்த மர்ம மனிதனால் நடத்தபடும் தொடர் கொலைகள் தான். அவன் ஆட்களை கொலை செய்து விட்டு கை, கால்கள், தலைகளை தனித்தனியே வெட்டி அவன் கொண்டு வந்த மூட்டை பைக்குள் போட்டு கொண்டு சென்று விடுவான்.

அந்த கொலையாளியின் சிறு துப்பு கூட இது வரை போலிஸ்க்கு கிடைக்கவில்லை.

அவன் அங்கு வந்து சென்றதற்கான ஒரு அடையாளமாகவே அந்த குறியீடை வரைந்து வைப்பான். அதை தவிர அவனுடைய தகவல் எதுவும் தெரியாது.

அப்படியானால் இங்கே ஏன் இரண்டு சிம்பல் இருக்கிறது என யோசித்தான்!

இவ்வாறு அன்றைய தினங்களில் வந்த செய்தி தாள்களை ஸ்கேன் செய்து பல்வேறு ப்ளாக்குகள் எழுதபட்டிருந்தது.

மேலும் அதனை பற்றிய விவரங்களை தேடும் பொழுது அவன் ஒரு நரமாமிச உண்ணியாக (hannibalism) இருப்பான். நரமாமிச உண்ணிகள் நாகரீகம் வளராத கால கட்டங்களில் பலர் பல்வேறு பகுதிகளில் இருந்துள்ளனர். இன்றைய நாகரீக காலங்களில் கண்ணிற்கு தெரியாமல் சிலர் உலாவி கொண்டுள்ளனர். அப்படிபட்ட மனிதனாகவே அந்த பெங்களூர் கொலைகாரன் இருப்பதற்கான சாத்தியம் அதிகமாகவே இருக்கிறது.

இதயெல்லாம் படித்த பிறகு அவனுக்கு தூக்கம் அறவே இல்லாமல் போனது. தன்னுடைய ப்ராஜக்டிலும் கவனம் செலுத்த இயலவில்லை. மறுநாள் காலை ப்ராஜெக்ட் ஐ விவரிக்க வேண்டும். மனதில் குழப்பங்கள் அதிகமாகின.

மறுநாள் காலை அவனுக்கு போன் வந்தது.

நான் தான் ஜி எம் (General Manager) பேசுறேன்.

சொல்லுங்க சார்.

கிளம்பியாச்சா?

எஸ் சார் கிளம்ப போறேன்.

ஹ்ம்ம்... பட் கிளையண்ட்ஸ் வர்றதுக்கு இன்னும் ரெண்டு நாள் ஆகுமாம். இப்போ தான் நியூஸ் வந்துச்சு.

ஒ...

நீங்க அங்கேயே இருங்க. டூ டேஸ் வெயிட் பண்ணுங்க. போன வேலைய முடிச்சிட்டு கிளம்பி வாங்க. ஓகே?

ஓகே சார் சுயூர்....!

ஓகே பாய்.

போனை வைத்த உடன் அந்த கண்ணாடியை பார்த்தான்.

மனதில் இருந்து அழுகை குமுறி கொண்டு வந்ததை அடக்கி கொண்டான்.

எரிச்சலாக இருந்தது.

ரூம் கொஞ்சம் சரி இல்ல. வேற ரூம் கிடைக்குமா என ஹோட்டல் ரிசப்சனில் கேட்டான்.



சாரி சார். எல்லா ரூம் புல் அண்ட் புக்குடு (Full and Booked). ரூம் ப்ரீயா இருந்தா நாங்களே கால் பண்றோம். இப்போ உங்களுக்கு ரூம்ல எதுவும் பிரச்சனையா இருந்தா வந்து சரி பண்ணி கொடுக்குறோம்.

சிறுது நேரம் யோசித்தான். ஓகே நான் ரூம் போய் கால் பண்றேன்னு. ரூம்க்கு கிளம்பினான்.

லிப்ட் மூன்றாவது மாடியில் சென்று நின்றது. கதவு திறக்கும் பொழுது ஒரு முதியவர் கிராஸ் ஆனார்.

இவன் வெளியே வந்து தன்னுடைய ரூம் அருகில் சென்று கதவை திறக்க சாவியை எடுக்கும் வேலையில் எதேர்ச்சையாக திரும்ப அந்த முதியவர் சுவற்றில் ஏதோ கிறுக்கி கொண்டிருந்தார்.

ரூம் திறப்பதை நிறுத்திவிட்டு. அய்யா கொஞ்சம் நில்லுங்க. நான் உங்க கிட்ட பேசணும்.

அந்த கிழவன் கவனிக்காமல் சுவற்றை கிறுக்கி கொண்டிருந்தான்.

மீண்டும் பேசி கொண்டே நந்தா அவனருகில் சென்றான்.

அவன் எதையும் கண்டு கொள்ளவே இல்லை.

அருகில் சென்றான். அந்த கிழவரின் இடப்பக்கம் நந்தா நின்றிருந்தான்.

நான் உங்க கிட்ட பேசணும் என்று மென்மையான குரலில் சொன்னான்.

அதை கேட்ட முதியவர் மெதுவாக திரும்பினார். என்ன பேசணும்?!

அப்பொழுதான் முதியவரை முழுசாக கவனித்தார். கையில் ப்ரஷ். இன்னொரு கையில் பெயிண்ட். த்ரீ ஸ்டார் ஹோட்டல் என்பதால் சுவற்றில் சிறு கீறல்கள் கூட விட்டு வைப்பதில்லை அந்த நிறுவனம். அதை தான் அந்த முதியவர் சரி செய்து கொண்டிருந்தார்.

ஒண்ணுமில்ல... ஒண்ணுமில்ல... என்ற படி பின்னோக்கி வந்தான் நந்தா. சென்று ரூமில் படுத்து கொண்டான்.

குழப்பம் தலைகேறியது. அவனது பணிகள் பாதிக்கபட்டது. குறியீடுகள் உறுத்தி கொண்டே இருந்தன. இந்த சிம்பல் ஏன் நம்மை பின் தொடருகிறது என கொஞ்சம் விரக்தியிலும் இருந்தான்.

பெர்முடா முக்கோணம் போல இந்த முக்கோணமும் மர்மமாக இருக்கிறதே என குழம்பினான்.

டக்கென்று லாப்டாப்பை மூடி வைத்தான்.

வெளியே வந்தான்.

ரூம் பாய் ஒருவன் வந்து கொண்டிருந்தான். அவனை அழைத்து இந்த ரூம்ல எதுவும் மர்டர் நடந்திருக்கா என கேட்டு கொண்டே ஒரு நூறு ரூபாயை அவன் கையில் திணித்தான்.

இந்த கேள்வியை எதிர்பார்க்காத ரூம் பாய் பதில் சொல்ல திணறினான்.

சும்மா பயபடமா சொல்லு.

நான் சின்ன சின்ன ஹோட்டல் இருந்து வேலை பாத்து வேலை பாத்து தான் இந்த த்ரீ ஸ்டார் ஹோட்டலுக்கு வேலைக்கு வந்திருக்கேன். என்னோட அனுபவத்துல ரெண்டு தடவை இந்த மாதிரி கொலைகள் நடந்திருக்கு. அப்புறம் பிராத்தலும். என்ன கேட்டா எல்லா ஹோட்டல்லையும் இந்த மாதிரி விபரீதங்கள் நடக்குறதிள்ள....

ஹேய்! ஹேய்! நான் கேட்டது இந்த ரூம்ல.

இல்ல சார். எனக்கு தெரிஞ்சி இல்ல.

சரி, இந்த ஹோட்டல் எத்தன வருஷமா இருக்கு?

இந்த ஹோட்டல் ஆரம்பிச்சு நாலு வருஷம் தான் ஆகுது.

ஆனா உள்ள பழைய காலத்து கதவெல்லாம் இருக்கு. தேக்குல செஞ்சது. பாத்ரூம் டோர்!

ஒரு ஹோட்டல்ன்னு ஆரம்பிச்சா எல்லாமே புதுசு வாங்குறதில்ல சார்.

அப்படியானால் இங்கே ஒரு கொலை மட்டும் தான்  நடந்திருக்கு. பாத்ரூம் கதவு வேறு எங்கோ இருந்து கொண்டு வரபட்டிருக்கு என யூகித்தான்

ஹ்ம்ம் ஓகே... என சொல்லிவிட்டு நேராக கீழே சென்றான்.

ரிசப்சனில் சொல்லி மேனஜரை அணுகினான்.

சொல்லுங்க நந்தா ரூம்ல எதுவும் பிரச்சனையா?.

அதெல்லாம் ஒண்ணுமில்ல எனக்கு ஒரு விவரம் தெரியனும். பெங்களூர்ல ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன். உங்களோட ரூம்ல தேக்குல செஞ்ச கதவு எல்லாம் பார்த்தேன். அது ரொம்ப காஸ்ட்லி. எப்படியும் புதிசா கிடைக்குறது வாய்ப்பில்ல. நீங்க எங்க வாங்குனீங்கன்னு சொன்னீங்கன்னா... எனக்கு தேவையான பர்னிச்சர் (furniture) அங்கேயே போய் வாங்கலாம்ன்னு இருக்கேன்.

இல்ல சார் அதெல்லாம் புதுசு.

சாரி சார். எனக்கு அது பழசுன்னு தெரியும். சும்மா சொல்லுங்க.

சில விவாதத்திற்கு பின்னர். 

அட்ரஸ் கொடுத்தார் மேனஜர்.

நேராக அந்த பழைய பொருட்கள் கடைக்கு சென்றான்.

தன் மொபைலில் போட்டோ எடுத்து வைத்திருந்த அந்த ரூமின் கதவை காண்பித்தான்.

குறிப்பா இந்த கதவு எங்க இருந்து வந்ததுன்னு கேட்டா சொல்ல முடியாது சார். இங்க பாருங்க மலை போல குவிஞ்சிருக்கு நிறைய சாமான்கள். இது எல்லாம் எங்கிருந்து வந்ததுன்னு கேட்டா கண்டிப்பா தெரியாது சார்.

அது வேலைக்கு ஆகாது என தெரிந்தது.அங்கிருந்து கிளம்பினான்.

அடுத்த நாள் காலை ஒரு டீ கடையில் நின்று நியூஸ் பேப்பரை படித்து கொண்டிருந்தவனுக்கு ஷாக்!

மாலை பொழுது ஆகி விட்டது. இதே குழப்பத்தில் ப்ராஜெக்ட் பற்றி மறந்தே போய் விட்டான்.

அவசரவசரமாக ப்ராஜெக்ட் வேலைகளை முடித்தான்.

அன்றைய பொழுது முழுவதும். குழப்பம், பதட்டம், பயம் கலந்தே இருந்தது. குறியீடு விஷயம் மூளையை போட்டு குடைந்து கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலை. 

ஒரு வழியாக பல தடுமாற்றங்கள், உளறல்களாக ப்ராஜெக்ட் விளக்கம் முடிவடைந்தது.

ஹெட் ஆபிசில் வேலை பார்க்கும் நந்தாவின் நண்பர் சதீஷுடன் இரவில் ரூமில் அமர்ந்து உரையாடி கொண்டிருந்தான் நந்தா.

ப்ராஜெக்ட் ஒரு வழியா சக்சஸ் ஆச்சு டா. ஆனா நீ ஏன் இவ்ளோ தடுமாருனன்னு தெரியவே இல்ல என கேட்டான் சதீஷ்.

சதீஷ், ஒரு விஷயம் சொல்றேன் என்று லாப்டாப்பை ஆன் செய்தான்.

அவன் கண்ட அந்த குறியீடு பற்றி விளக்கினான். அவன் சேகரித்து வைத்த ப்ளாக் நியூசை அவனிடம் காட்டினான்.

சதீஷ் எந்த வித ரியாக்சனும் இன்றி அவனை பார்த்தான். ஏண்டா டேய் அவனவனுக்கு எவ்வளவு பிரச்னை இருக்கு. இதெல்லாம் ஒரு விசயம்ன்னு நீ அனலைஸ் பண்ணி கிட்டு இருக்க. இதெல்லாம் மூடி வை. அந்த லாப்டாப் கொடு. 87 ல நடந்தத இப்போ புரட்டி பார்த்துகிட்டு...

இல்ல மச்சி. 87 ல மட்டும் நடக்கல! என்றான் நந்தா.

என்ன சொல்ற?!

இருபத்தி அஞ்சி வருஷம் அப்புறம் ரெண்டு நாள் முன்னாடி தொடர்ந்து மூணு கொலை நடந்திருக்கு சென்னைல. அதுவும் இதே சிம்பல், இதே பாணி. கொலை பண்ணது அப்புறம் கொலை பண்ண பாடியை தூக்கிட்டு போயிடுறான். இங்க பாரு இந்த நியுஸ் பேப்பர் நேத்தோடது என்று சொல்லி சதீஷிடம் கொடுத்தான் நந்தா.

அவன் படித்து பார்த்தான்.

இருபத்தி ஐந்து வருடத்திற்கு பிறகு. பெங்களூர் கொலைகாரனின் வெறியாட்டம் என்று தலைப்பிருந்தது. மேலும் வாசித்தான்.

பெங்களூரில் நடந்த கொலைகளோடு சென்னையில் நடந்த அந்த மூன்று கொலைகளும் ஒத்து போய் இருந்தது. அதே குறியீடு. அங்கயும் இருந்தது.

இங்க பாரு நந்தா. இதெல்லாம் படிச்சிட்டு குழப்பி கிட்டு இருக்காத. இதுக்கும் உனக்கு சம்மந்தமே இல்ல. நீ இன்னைக்கு நைட் ஊருக்கு கிளம்பு. போய் வைப் கூட சந்தோசமா இரு. உன் பொண்ணு கூட ரிலாக்ஸ் பண்ணு என்று சொல்லி கொண்டே லாப்டாப்பில் உள்ள அந்த இமேஜ்களை டெலிட் செய்தான்.

டேய் சதீஷ். எனக்கு ப்ளைட் புக் பண்ணு. ட்ரையின் வேணாம். திரும்பவும் அதே நியாபகம் வரும்.

இல்ல நந்தா. இப்போ ப்ளைட் இருக்கா இல்லாயான்னு தெரியல.

இல்ல டா கொஞ்சம் பாரு...

ப்ளைட் ஏறி சென்னை ஏர்போர்ட் வந்து அங்கிருந்து டாக்ஸி மூலம் தன்னுடைய அப்பார்ட்மெண்ட்டில் வந்து சேர்ந்தான்.

எட்டாவது ப்ளோரில் இருக்கும் தன்னுடைய பிளாட்டுக்கு லிப்ட் மூலம் சென்றான்.

எட்டாவது ப்ளோரில் நடந்து கொண்டே மனைவிக்கு கால் செய்தான். அவள் எடுக்கவில்லை.

அவன் பிளாட் அருகில் வந்துவிட்டான். மனைவி போன் எடுக்காததால் தன்னிடம் உள்ள சாவியை எடுத்து டோரில் சொருகினான். சொருகிக்கொண்டே கதவை கவனிக்கும் பொழுது திடுக்கிட்டான். அந்த கதவில் அதே குறியீடு.

அவசரவசரமாக கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தான்.

பெட், தரை, திரை சீலை, சேர் அனைத்திலும் ரத்தம் தெறித்திருந்தது.

தலையில் கையை வைத்த வாரே திகைத்த படி பின்னாடியே நகர்ந்து சென்றான். அங்கிருந்த ஜன்னலில் சாய்ந்த படி அழ தொடங்கினான்.

அவன் கீழ் முதுகில் எதோ உறுத்தியது.

மெதுவாய் திரும்பி பார்த்தான்.

கொக்கி. அந்த கொக்கியில் இருந்து கயிறு.

ஜன்னல் வழியே எட்டி பார்த்தான். கயிற்றை பிடித்து இறங்கி கொண்டிருந்தான் அந்த பெங்களூர் கொலைகாரன். எல்லாமே தற்போது தான் நடந்து முடிந்திருக்கிறது என்பதை உணர்ந்தான் நந்தா.

கொலைகாரன் இறங்கி கொண்டிருப்பது அப்பார்ட்மெண்டின் பின்புறம். அவன் முகம் தெரியாமல் இருக்க குல்லாய் ஒன்றை அணிந்து கருப்பு கண்ணாடி போட்டிருந்தான்.

நந்தா வேகமாக படியிறங்கி ஓடி வந்தான்.

கொலைகாரன் இறங்கி முடித்து தன் பைக்கை நோக்கி ஓடி கொண்டிருந்தான்.

தன் பைக்கில் ஏறி அமர்ந்த கொலைகாரன் விர்ரென கிளம்பினான்.

அந்த அப்பார்ட்மெண்ட் முடியுமிடத்தில் இடது புறம் திரும்பும் நேரத்தில் நந்தா வேகமாக ஓடி வந்து அவன் மேல் பாய்ந்தான்.

கொலைகாரன் கத்தியை எடுத்து நந்தாவை பலமாக வயிற்றில் நாலு முறை குத்தினான்.

நந்தா விடவில்லை. ஆனால் பலம் இழந்திருந்தான்.

கொலைகாரன் நந்தாவின் பிடியில் இருந்து ஓட. நந்தா அவனது பின் புறம் அணிதிருக்கும் பையை பிடித்து இழுக்க பை கிழிந்தது.

நந்தா கிழே விழ அவன் கண் முன் பையில் (Bag) இருந்து ஒரு பெண்ணுடைய தலை உருண்டு வந்து அவனை பார்த்தது.

நந்தா அலறினான். ஒரு பக்கம் நிம்மதி. அந்த தலை அவன் மனைவியுடையது இல்லை. அவன் வீட்டு வேலைகாரி.

கொலைகாரன் தலையை எடுக்க வந்தான்.

நந்தா அந்த தலையின் முடியை இறுக்கமாக பிடித்து கொண்டான்.

கொலைகாரனுக்கு. தலையை விட மனமில்லை.

கடைசியாக பிடுங்கி கொண்டான்.

கொஞ்ச தூரம் ஓடி கொலைகாரன் நின்றான்.

இருவரும் இளைப்பாறினார்.

மெதுவாக கொலைகாரன் அடி எடுத்து வைத்தான்.

நந்தா ஒரே மூச்சில் ஓடி அவன் மேல் சென்று விழுந்து விட்டான்.

கொலைகாரனால் போராட முடியவில்லை.

நாலு முறை கையால் முகத்தில் குத்து விட்டான் நந்தா. பிறகு குல்லாயை கழட்டினான்.

வயதான மனிதன். நரைத்து போன முடி.முகம் முழுவதும் வெள்ளை நிற தாடி. எங்கோ பார்த்ததை போன்ற நினைவு.


அந்நேரம் அந்த பகுதியில் ரோந்து போலிஸ் ஜீப் வந்தது....

ஒரு வாரம் பிறகு.

இவன் கொலைகாரனை பிடித்த செய்தி அனைத்து ஊடகங்களிலும், இணையத்திலும் காட்டு தீ போல பரவி கொண்டிருந்தது.பாரட்டுக்கள் வந்து குவிந்து கொண்டிருந்தன

நந்தா ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்து கொண்டிருந்தான். அங்கே அவன் மனைவியும், மகளும் உடன் இருந்தனர்.

நீங்க அன்னைக்கு உன் அம்மா வீட்டுக்கு போய்ட்ட. ஆனா அந்த வேலைகாரி தான் பாவம். முப்பத்தி அஞ்சி வயசு ஆகியும் கல்யாணம் கூட ஆகல என்று வருத்தபட்டான்.

நீங்க தான் அடுத்த நாள் காலைல வர்றதா சொன்னீங்க. அதனால தான் நாங்க வேற மாதிரி பிளான் பண்ணி வெளியே போனோம். இப்படி எல்லாம் நடக்கும்ன்னு யார் கண்டா! ஆனா தொடர்ச்சியா உங்களுக்கு மட்டும் அந்த சிம்பல் பாலோவ் பண்ணி கிட்டு இருந்தது நீங்க அந்த பெங்களூர்காரண பிடிக்கிறதுக்கு தான் கடவுள் செஞ்சி வச்ச வேலை தான் என்னவோ.

நந்தாவுக்கு சிறுது கோபம் வந்தது. உனக்கு வேற வேலை இல்ல. எதையாவது நீயே நினைச்சிக்குறது.

சரி சரி விடுங்க...

சிறுது நேரம் கழித்து... ஆனா அந்த கொலைகாரன நான் வேற எங்கயோ பார்த்தேன். அது தான் நினைவுக்கு வர மாட்டேங்குது என்றான்.

ஏங்க சும்மா சும்மா அதையே போட்டு குழப்பி கிட்டு இருக்கீங்க?! என அவன் மனைவி கேட்டு கொண்டிருந்த நேரத்தில்... அவன் இருக்கும் ரூமின் வாசலில் அழிந்து போன கதவு எண்ணை பெயிண்டில் எழுதுவதற்கு ப்ரஷ்ம் கையுமாக ஒருவன் வந்து நின்றதும் நந்தாவிற்கு கொலைகாரனை கண்ட இடம் நினைவுக்கு வந்தது.

- திவான். 

No comments:

Post a Comment